சனி, 4 ஏப்ரல், 2020


                       இசைநிறை வீடு
நாவல் மரமேறி
அணிலைத் துரத்தி தோற்ற
நல்லப்பாம்பு கீழிறங்கிச் செல்கிறது .
சாம்பல் குருவியை குறிவைத்து
தோற்றுப் போனது பூனை .
நாட்டவரைப் பூ மீதும்
சுண்டைப் பூ மீதும் அமர்ந்து நகர்ந்து
பறக்கிறது வண்டு .
புங்கு , மருது , முருங்கை  என ,
இவற்றோடு பெயர் தெரியாத சில மரங்கள்
குளிர் காற்றில் அசைகின்றன .
புதர் போன்று வளர்ந்துள்ளன
முல்லை , பிச்சி , ரோஜா  செடிகள் ;
அதற்குள் ஒரு தேன்கூடு , ஒரு தேனீக் குடும்பம்
சில எலுமிச்சைச் செடிகள் அவற்றில்
நட்சத்திரங்களாய் சில பழங்கள் .
சுண்டைக் காய்களை உண்டு பசியாறும் கருங்குயில்கள் ;   
இவற்றிடையே நறுமணம் பரப்புகிறது எங்கள் வீடு .
தேன் சிட்டு மரகதப் புறா நெல்லுச் சிட்டு என
இவற்றோடு இணைந்து இசைக்கிறது எங்கள் வீடு .
                                              தமிழாசிரியன்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

                                                           ஓசை 
             பாத்திரங்களை உருட்டிய குட்டி யானை
             ஊர்ந்து திரிந்த ஆமை 
             வீடுமுழுவதும் கனைத்த குதிரை
             அகவித் திரிந்த மயில்
             முழங்கிய சிங்கம்
             மியாவ் ! மியாவ் ! பூனை
             துள்ளியோடிய புள்ளி மான்
             அனைவரும் ஒடுங்கி இருந்தனர் வீட்டு மூலையில்
             ஆம் எனது மகள் எல் கே ஜி யில் சேர்ந்துவிட்டாள் .

                உரையாடல்

              பூனை , மியாவ் ! என்றது .
              சிறுமியோ
              என்ன பசிக்குதா ? என்றாள் .
              பூனை , மியாவ் மியாவ் ! என்றது
              அப்பா மதியம் சாப்பாடு தரலியா ? என்றாள் சிறுமி .
              பூனை மியாவ் மியாவ் ! என்றது .
              இரு ! இந்தா அதிரசம் சாப்பிடு ;
              டோன்ட் டாக் கட்டளைக்கு
              பகல் முழுவதும் பள்ளியில் கட்டுப்பட்ட சிறுமி
              பூனையோடு உரையாடிக் கொண்டிருந்தாள் .

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கொண்டாட்டங்கள்



                        
பட்டாசு துன்புறுத்தும் இரவுகள் !
நரகாசுரனின் இறப்பைக்
கொண்டாட முடியவில்லை .
தேனீக்கள், பறவைகள், பூச்சிகள்
மீண்டும் ஒரு கண்ணனை எதிர்நோக்கியுள்ளன
பட்டாசு நரகாசுரன்
மீண்டும் ஒரு கண்ணனால் கொல்லப்படுவான ?
தன்னை அடையாளம் கண்டு சொன்ன
விண்மீன்களை ஏசு வானில் தேடினார்
அவரது கண்களுக்கு அவை புலப்படவில்லை
கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள் , மின்சார நட்சத்திரங்கள்
அவரது கண்களையே ஒளி இழக்கச் செய்தன .
மின்சாரம் !
அணுமின் நிலையங்களாலும்  அனல்மின் நிலையங்களாலும்
காயம்பட்ட உயிர்களில் ஏசுவும் கலந்திருந்ததால்
மின்சார விளக்குகளினூடே
அவரால், அவரது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை .
ஒளி , ஒலி ,  இரைச்சல் ,  ஆடம்பரம்
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, தசரா
தனது கையில் உள்ள ஏட்டில்
மின்சார  உற்பத்திக் கழிவு பற்றித் தேடினாள் சரசுவதி
அக்கால ஏட்டில் எக்குறிப்பும் இல்லை ;
நவீனகால ஏட்டில் அக்குறிப்புகள் மறைக்கப் பட்டிருந்தன
அதனால் !
சரஸ்வதி, மின்சாரக் கழிவு குறிப்பைத் தேடிக்கொண்டிருப்பதால்  
அவளுக்கான விழாவை அவளால்
கொண்டாட முடியவில்லை.
மக்களின் ஆடம்பரத்தை வலியுடன் நோக்கினாள்.
மின்சாரக் கழிவுகளால் காயம்பட்ட உயிர்களுக்கு  மருந்திட
கடவுளர்கள் அலைந்து கொண்டிருந்தனர் ?
மருந்தும் புலப்படவில்லை ,  
காயங்களும் ஆறவில்லை .